செவ்வாய், 26 மார்ச், 2019

காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல் -நீலகண்டன்-


"தமிழ்ச் சிறுபத்திரிக்கை தளத்தில் ‘காலச்சுவடு’ என்கிற பார்ப்பனப் பத்திரிக்கை, இலக்கியத்தில் இந்துத்துவத்தைப் பிரச்சாரம் செய்வதற்கென்றே கடந்த காலங்களில் இயக்கி வந்தது போதாமல், இப்போது ‘மத சார்பின்மை ஒரு மறு ஆய்வு’ என்கிற பெயரில் இந்துத்துவத்தை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டு நரித்தனமாக ஆதரிக்கும் வகையில் இஸ்லாமியர்களை, இஸ்லாமிய ஆதரவாளர்களைக் கொச்சைப்படுத்தியும், உளவுத் துறைக்கு ஆள்காட்டி வேலை செய்யும் நோக்கிலும் நேரடியாகக் களத்தில் குதித்துள்ளது." 
அன்று சொன்னதையே இன்று மீளவும் சொல்கிறோம். 

//‘ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணின் யோனியிலும் இந்துக்களின் விந்தை நிரப்பி புனிதப்படுத்து// என்கிற குரு கோல்வால்க்கரின் பயங்கரவாத அரசியலுக்கு முண்டு கொடுக்கும் காலச்சுவடு போன்ற போக்கிரிகளிடத்தே மனமாற்றமோ, அரசியல் மாற்றமோ வரும் என்று நாம் எப்போதும் நம்பவே மாட்டோம்.
அன்று சொன்னதையே இன்று மீளவும் சொல்கிறோம்



வெள்ளி, 22 மார்ச், 2019

தோழர் டானியலின் தணிக்கை செய்யப்பட்ட கட்டுரையும் இன்று எழும் கேள்விகளும்


உயிர்மெய் இதழ்-4 (2007) பிரசுரமான கட்டுரை

இங்கு பிரசுரமாகும் தோழர் டானியலின் கட்டுரை 1979ல் யாழ்ப்பாணத்தில் தீண்டாமை எதிர்ப்பு வெகுஜன இயக்க மலருக்கென எழுதப்பட்டு அப்போதிருந்த தணிக்கைச் சட்டத்தின் காரணமாக பிரசுரம் தடைசெய்யப் பட்டதால் குறிப்பிட்ட மலரில் பிரசுரமாகவில்லை. இக்கட்டுரையின் ஒரு பிரதி 1982இல் நான் டோக்கியோவில் வாழ்ந்து வந்தபோது யாழில் இருந்துவந்த ஒரு நண்பருக்கூடாக எனக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து கடந்த 25வருடங்களாக இந்தக் கட்டுரைப் பிரதியும் என்னுடன் பல இட மாற்றங்களை அனுபவித்துள்ளது. எனக்கு ஒரு பிரதியைக் கிடைக்கச் செய்ததுபோல வேறு யாருக்கும் டானியல் இக் கட்டுரையின் பிரதிகளை அனுப்பியிருப்பார். ஆகவே இந்தக் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருக்கலாம். அப்படியிருப்பினும் இதனை மீண்டும் பிரசுரிப்பதில் பயனுண்டு என நம்புகிறேன்.

இந்தக் கட்டுரையில் யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களின் வரலாற்றுப் பின்னணியைத் தெளிவாக்கி 1960களில் இடம்பெற்ற வெகுஜனப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி ஆயப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் சமூகங்களில் யாழ்ப்பாணத்திலேயே சாதியமைப்பு மிகவும் இறுக்கமான நிறுவன மயமாக்கலைக் கொண்டிருந்தது. சைவவேளாள உயர் வர்க்கத்தினால் பிராமணிய மயப்படுத்தப்பட்ட யாழ் சமூக அமைப்பில் தீண்டாமையும் சாதிக் கொடுமைகளும் சைவ வேளாளியக் கருத்தியலினாலும் பல்வேறு சடங்குகளினாலும் நியாயப் படுத்தப் பட்டன. இத்தகைய ஒரு சமூக அமைப்பில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களின்றித் தாழ்த்தப்பட்போர் தமது சுதந்திரத்தை மனித கவுரவத்தைப் பெற முடியாதென்பது அடிப்படை உண்மை. கிறிஸ்துவ பாடசாலைகளின் வருகை யாழ் சமூகத்தில் சாதியத்தை கேள்விக்குள்ளாக்கி எதிர்புக்களைத் தெரிவிக்கும் சமூக இடைவெளிகளை உருவாக்கவதற்கு உதவியது.

கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனத்தினர் தமிழ்ச்சமூக அமைப்பின் அடிப்படைகளையோ, ஆதிக்க சக்திகளையோ நேரடியாகத் தாக்காது தமது செயற்பாடுகளை நடத்தியபோதும், கிறிஸ்துவ பாடசாலைகளும் மதமாற்றமும் ஒருசில தாழ்த்தப்பட்ட சாதியினரின் கல்விக்கும் சமூக நகர்ச்சிக்கும் உதவின. இந்தத் தனிநபர்கள் சாதியத்திற்கெதிராகக் குரல் கொடுத்தனர். நடைமுறைரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இந்தப்போக்கு சென்ற நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்திலேயே துளிர் விடத் தொடங்கியது. இந்தப் போக்கு தொடர்ந்த வேளை 1920களில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் உதயமாகியது. இது காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தினாலும், முற்போக்குச் சிந்தனைகளாலும் ஆகர்சிக்கப்பட்ட இந்த இயக்கம் பிரிட்டிஷ் காலனித்துவத்திடமிருந்து பூரண சுதந்திரத்தை வேண்டி நின்ற அதேவேளை, யாழ் தமிழ் சமூகத்தின் சாதி அமைப்பினையும் எதிர்த்துச் செயற்பட்டது.

இதைத் தொடர்ந்து 1935இல் உருவான இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் சாதிய எதிர்ப்பினைத் தொடர்ந்தனர். இடதுசாரிய அரசியலின் வருகை சாதி அமைப்புப் பற்றிய அறிவுரீதியான விமர்சனப் போக்கினையும் வளர்க்க உதவியது. இதே காலகட்டத்தில் சர்வஜன வாக்குரிமையின் வருகை தமிழ் அரசியலில் யாழ் சமூகத்தின் ஏறக்குறைய முப்பது வீதத்தினராய் இருந்த தாழ்த்தப்பட்டோரின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. 1920களில் யாழ் இளைஞர் காங்கிரசினால் நடைமுறைப் படுத்தப்பட்ட சமபந்தி போசனம் காலப்போக்கில் பாராளுமன்ற அரசியல்வாதிகளால் வாக்குகள் பெறும் ஒரு பிரச்சாரக் கருவியாக்கப் பட்டதையும் காண்கிறோம்.

ஆயினும் இந்த வலதுசாரி அரசியல் வாதிகளும் அவர்களின் கட்சிகளும் (தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி) சைவ வேளாளியத்தின் அமைப்பு ரீதியான, கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்தை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ முன்வரவில்லை. அப்படிச் செய்வது அவர்களின் வர்க்க நலன்களுக்கு வரோதமானது என்பதை அவர்கள் அறியாமலில்லை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1943இல் சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு குழுவினரால் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் சாதிய எதிர்ப்பில் இடதுசாரிகளின் குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. படிப்படியாக வெகுஜன அணிதிரட்டலின் அவசியம் மேலும் உணரப் படுகிறது. 1960களில் மாக்சிய லெனினிசக் கட்சி உருவாகிய பின்னர் இது நடைமுறைப் படுத்தப்படுகிறது. வெகுஜன அணிதிரட்டலின் அடிப்படையிலமைந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தினை டானியல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

’’தியாகங்களுக்கஞ்சாத, விட்டுக்கொடாத போராட்டம் ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியது’’

டானியலின் கட்டுரையின் பிரதான செய்திகளில் இது முதன்மை பெறுகிறது. அவர் கூறுவதுபோன்று 1966-78க்கிடையில் உள்ள காலத்தில் பெற்ற வெற்றிகள் அதற்கு முந்திய முப்பது ஆண்டு காலத்தில் பெற்றவற்றைவிட மிகத் தாக்கமானவை. இதற்கான விளக்கத்தை வெகுஜனப் பங்கு பற்றலைக் கொண்ட போராட்டத்திலேயே காண்கிறோம். அதேவேளை சாதியத்திற்கெதிரான நீண்ட வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களையோ பல்வேறு தனி நபர்கள் ஆற்றி பங்கினையோ டானியல் ஒதுக்கி விடவில்லை. அவருடைய வரலாற்றுப் பார்வை பல வகையில் முழுமையானது. அந்த முழுமையான வரைதலுக்கூடாகவே அவர் வெகுஜன அணிதிரட்டலின் அடிப்படையிலான போராட்டத்தின் விசேடத் தன்மையை இனம் காட்டுகிறார்.

டானியலின் இந்தக் கட்டுரை அவரது முழுப் பங்களிப்புடன் ஒப்பிடும்போது ஒரு சிறு அலகாகவே படும். ஆயினும் அதன் உள்ளடக்கம் கனதியானது என்பதை வாசகர் ஏற்றுக்கொள்வர். டானியலின் விமர்சன அணுகுமுறையில் மானுடவியல் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய நாவல்களை, குறுநாவல்களைப் படித்தவர்கள் இது டானியலின் அறிவின், ஆற்றலின் ஒரு சிறப்பம்சம் என்பதை ஏற்றுக்கொள்வர்.

இந்தக் கட்டுரை தற்போது பிரசுரமாவது புதிய விவாதங்களுக்கும் ஊக்கமளிக்கலாமென நம்புகிறேன்.

* தீண்டாமைக்கெதிரான போராட்டம் ஏன் தொடரவில்லை?

* அதைத் தொடர்ந்தும் தக்கவைக்க முடியாமைக்கு என்ன காரணங்கள்?

* தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்திற்கும், இந்தப் போராட்டத்திற்குமிடையே உறவு இருந்ததா? அப்படியானால் அது எத்தகையது?

Cதீண்டாமைக்கெதிரான வெகுஜனப் போராட்டத்தின் அரசியல் நெறிப்படுத்தல் எத்தகையது?

* கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இது பற்றி விவாதங்கள் வேறுபாடுகள் இருந்தனவென்றால் அவை எவை? அவை எப்படிக் கையாளப்பட்டன?

* தமிழ்த் தேசியப் போராட்டமும் அதைப் பீடித்துள்ள இராணுவவாதம், அது உருவாக்கிய துப்பாக்கிக் கலாச்சாரம் போன்றவை சாதி அமைப்பையும் அதற்கெதிரான போராட்ட மரபினையும் எப்படிப் பாதித்தன?

* தேசியப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் சாதியத்தின் நிலை என்ன?
அது பலவீனம் அடைந்துள்ளதா?
அப்படியானால் அது எந்த வகையில்?

* இடப் பெயர்வும் புலப் பெயர்வும் வெளிநாட்டுப் பணமும் சாதி வேறுபாடுகளை எப்படிப் பாதித்துள்ளது?

* மரபு ரீதியாக பாதிக்கப்பட்ட சாதியினர்க்கு சமூக நகர்ச்சி சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளனவா?

* சைவ வேளாளியமெனும் கருத்தியலின் அது வைத்திருக்கும் விழுமியங்களின் இன்றைய நிலை என்ன?

இப்படிப் பல கேள்விகள் டானியலின் கட்டுரையை வாசிப்பவர் மனதில் தோன்றத்தான் போகின்றன. 

1964ம் ஆண்டு காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஸ்தாபனங்களின் ஐக்கியத்தில் அச்சுவேலியில் நடந்த மாநாடும், அந்த மாநாட்டில் கலந்துகொண்டு ”ஆறுமாத காலத்துள் உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்” என சாவகச்சேரி எம்.பி திரு வீ.என். நவரெத்தினம் அவர்கள் தந்த வாக்குறுதியும், காலஞ்சென்ற கோப்பாய் எம்.பி திரு.எஸ்.வன்னியசிங்கம் அவர்கள் 61இல் ஸ்ரான்லி பாடசாலை வட்டமேசை மாநாட்டில் தந்த வாக்குறுதியும் பற்றிய தாற்பரியங்களும் 1965இல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய இயக்கத்தினால் இணுவில் கந்தசாமி கோவிலில் இருந்து திருவாளர்கள்: நல்லையா, சுப்பிரமணியம் முதலானோர் தலைமை தாங்கி நடாத்தப்பட்ட – முற்றுமுழுதாகத் தாழ்த்தப்பட்ட மக்கைளையே கொண்ட – மௌன ஊர்வலமும் அத்தோடொத்த பல காரியங்களும், மீளாய்வு செய்யப்பட்டு, ”தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டம் ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடியது” என்ற கொள்கையில் வெகுஜன இயக்கம் நெறிப்படுத்தப் பட்டது. 

தோழர் டானியலின் தணிக்கை செய்யப்பட்ட கட்டுரை

இந்த நெறிப்படுத்தலின் அடிப்படையில் ஆலயப்பிரவேச இயக்கங்கள், தேனீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்கள் நாடெங்கும் விரிவடைந்தன. இந்தப் போராட்டங்கள் இழப்புக்கள் பலவற்றுக்கும் உட்பட்டதாயிற்று. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை இயக்கங்கள் காலத்தில் இந்த மக்களுக்கு ஒத்தாசையாக இருந்த தமிழ்த் தலைவர்களும், பிரமுகர்களும், தந்த ஆதரவுக்கு முற்றும் வேறுபட்ட விதத்தில் அப்போதைக்கப்போது உரிமைப்போர் நடந்த இடங்களுக்கு நேராகச் சென்று ஆலோசனை கூறியும், உற்சாகமளித்தும், இலங்கையின் சகல பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை விளங்கவைத்தும், சிங்கள சாதாரண மக்களின் அனுதாபத்தைப் பெற்றுத் தந்தும் இன்றுவரை தொடர்ச்சியாக வெகுஜன இயக்கத்தின் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தியும் வரும் என்.சண்முகதாசன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் அதேவேளை சாதி வெறியர்களுக்குச் சிம்ம சொற்பனமாகவும் இருக்கிறார் என்பது விசேஷமாகக் குறிப்பிடக் கூடியதாகும்.
66-78க்கிடையிலுள்ள காலப்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் முன்னே காட்டப்பட்ட 30 ஆண்டுகால இயக்க வழியில் இந்தப் 12 ஆண்டு காலம் குறுகியதாயினும் இந்தக் குறிகிய காலத்திற் சாதிக்கப்பட்ட காரியங்கள்தான் விகிதத்தில் மிகமிகத் தாக்கமானதும், நிரந்தரமானதுமாகும். இந்தக் குறுகிய காலப் பலாபலன்களை அரைநூற்றாண்டு காலப் பலாபலன்களுடன் ஒப்பிடுவதில் கருத்துவேறுபாடு யாருக்குமே இருக்க முடியாது!
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகள்!
மாவிட்டபுரம் கந்தன், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள், செல்வச்சந்நிதி முருகன், வல்லிபுர ஆழ்வார் ஆகியவைகள் உட்படப் பல பகுதிகளின் ஆலயங்களின் கதவுகள் திறக்கப்பட்டதும், எவ்வளவு சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்களோ அதேயளவுக்குப் பிரசித்தி பெற்றவையே தேனீர்க்கடைகள், பொது நிலையங்கள் திறக்கப்பட்ட சம்பவங்களும், பொதுக் கிணறுகள் புழக்கத்துக்கு விடப்பட்ட செயலுமாகும்.
1968-78க்கிடையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் மக்கள் மனத்திற்கு வலிந்து கொண்டுவர வேண்டியதில்லை. ஏனெனில் இவை மிகச் சமீபத்திலே நடந்த 10ஆண்டுகாலச் சம்பவங்களாகும்.
அதற்காக ஒரு வரலாறு பிறக்க இருக்கிறது. அந்த வீர வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களின் பலநூறு சந்ததியினருக்கும் வழிகாட்டியாகவே நிற்கப்போகின்றது.
இந்த இடையில் சாதிக் கொடுமையின் வேள்வித் தீக்கு 11 ஒடுக்கப்பட்ட வீரர்கள் பலியிடப் பட்டனர். பொருட்சேதம், இரத்தசேதம் கணக்கிட முடியாதவை. இந்தத் தியாகங்கள் யாவும் ஒடுக்கப்பட்ட மக்களின் 50ஆண்டுகாலத் தியாகங்களைவிட மேலானவை என்பதற்குப் பின்னே வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு சான்றுகள் பகரும். இச்சிறு கட்டுரைக்குள் அவைகளை எல்லாம் அடக்க முடியாது.
இந்தப் பத்தாண்டு காலத்துள் ஒடுக்கப்பட்ட மக்களாலும், அதற்கு ஆதரவு தந்த சக்திகளாலும் சரித்திரப் பிரசித்தி பெற்ற கோவில்கள் நான்கு உட்படப் பலவும், தேனீர்ச் சாலைகளும், பொது நிலையங்களும் வெல்லப்பட்டன.
”தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டமே முடிவான விடுதலையைத் தரவல்லது” என்ற வழியில் முன்னேறிச் செல்லத் துடிக்கும் மக்கள் பரப்பில் மாற்றங்களை வரவேற்கும் சகலரும் இணைந்துகொள்ளக் கடமைப்பட்டவர்களாகின்றனர்.
பின்னணி (இங்கு சில பகுதிகள் காணாமல் போய்விட்டன)
அவ்வேளை இந்துக்கல்லூரி ஆசிரியராக இருந்த நெவின்ஸ் செல்லத்துரை அவர்களைத் தலைவராகவும், அமரர் ஜேக்கப் காந்தி அவர்களைச் செயலாளராகவும் கொண்டு உதயமாகிய ”ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்திற்கு” மேலே குறிப்பிடப்பட்ட நால்வரும் போஷகர்களாக இருந்தமையிலிருந்து அன்று தொடக்கம் இன்றுவரை சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் தன்னந்தனியனாக நிற்கவில்லை என்பதும், காலத்துக்குக் காலம் நல்லெண்ணம் கொண்ட மக்கள் பலரும் ஒத்தாசை நல்கியுள்ளனர் என்பதும் புலனாகின்றது.
இந்தப் போஷகர்களில் மூவர் வெள்ளையர்கள் ஆதலால் அவர்கள் பிரதானப் படுத்தப் படவில்லையாயினும், உருத்திர கோடீஸ்வர ஐயரைப் பொறுத்தவரை அவர் சாதித் தமிழர்களின் கண்டனங்களுக்கும், எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் இலக்காக வேண்டியதாயிற்று. இதேபோல் இந்த ஸ்தாபனத்தின் யோவேல் போல் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்துப் பெருமையைச் சம்பாதிக்கத் தவறவில்லை.
1927ம் ஆண்டுக் காலகட்டத்தில் இலண்டனில் இருந்து தனது நண்பர் மூலமாக இலங்கைவாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை, இலண்டனில் குடியேற்ற நாடுகளின் பிரச்சனைகளைக் கவனிக்கவென நிறுவப்பட்ட சபைக்குத் தெரிவித்ததில் அமரர் யோவேல் போல் அவர்கள் எடுத்த முயற்சியின் பலாபலனாக டொனமூரைத் தலைவராகக் கொண்டு இலங்கைக்கு வந்த அறுவர் அடங்கிய கமிஷனாகும். ”வயதுவந்தோருக்கு வாக்குரிமை அளித்தல்” என்ற கொள்கையின் கீழ் அன்று குடியேற்ற நாடுகளின் காரியதரிசியாக இருந்த அமெரி என்ற M.P யினால் நியமிக்கப்பட்ட இந்த டொனமூர்க் கமிஷனுக்கு எதிர்ச் சாட்சியமளிக்க சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலண்டன் மாநகரம் சென்றதில் இருந்துதான், ”பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டுச் சாதிமான்கள் யாசகம் போவரோ?” என்ற கேள்வி சாதிமான்களிடையே ஆக்ரோஷமாக எழுந்து சாதி அடக்குமுறைகள் கோரவடிவங்களை எடுத்தன என்பது முக்கிய கவனத்துக்குரியதாகும். பின்னர் இங்கே வந்த டொனமூர் கமிஷன் ”வயது வந்தோருக்கு வாக்குரிமை” கிடைப்பதன் மூலம் பல உரிமைகளை அவர்கள் அடைய வழி பிறக்கும் என அறிக்கை மூலம் பிரகடனப் படுத்தியபோதும் உள்நாட்டு அரசு இயந்திரங்களைப் பெருஞ்சாதியினரே ஆளுகை நடத்தி வந்தமையால்- ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர் பார்க்கப்பட்டவைகள் நடந்தேறவில்லை. பதிலுக்கு அடக்குமுறைகள் அதிகரித்தன. விதானை, உடையார், மணியகாரன் என்ற பதவிகளில் குந்தியிருந்தவர்கள், காவல்ப் படையினைச் சேர்ந்தவர்கள், சிவில்சேவை அதிகாரம் வகித்தவர்கள் உட்பட சகல பிரிவினரும் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் துரித கதியில் செயற்படத் தொடங்கினர். இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத ஒடுக்கப்பட்ட மக்கள் மதமாற்றம் போன்ற குறுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் ஒருசில சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின என்பது உண்மையே.
அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிகளுக்குக்கூட அனுமதி கிடைக்கப்பெறாத மக்களுக்குப் பிற மதப் பாடசாலைகள் சற்று வழி விட்டன. சுற்றுச்சார்புகளை மீறிப் பாடசாலைகளுக்குச் சென்ற பலர் தண்டிக்கப்பட்டனர், இம்சிக்கப் பட்டனர்.
பகிரங்க வீதிகளில் தலைநிமிர்ந்து நடமாடத் தடை- சுடலைகளில் பிணம் சுடத் தடை- பொது ஸ்தாபனங்களில் உள்நுழையத் தடை- சுதந்திரமான வாகனப் போக்குவரத்துக்குத் தடை- கோவிற்பக்கம் செல்லத் தடை- மேளம் அடிக்கத் தடை- மீசை விடத் தடை- கடுக்கன் அணியத் தடை- குளங்களில் குளிக்கத் தடை- பந்தல் போட்டு வெள்ளை கட்டத் தடை- முளங்கால் மட்டத்திற்குக்கீழ் வேட்டியணியவும், மேலங்கி அணியவும், சால்வை போடவும் தடை- வண்டில் ஆசனத்தட்டில் ஏறியிருக்கத் தடை- புகைவண்டியின் ஆசனங்களில், பஸ் ஆசனங்களில் இருக்கத் தடை- கடை போன்றவை வைக்கத் தடை- செய்த வேலைக்குக் கூலி கேட்கத் தடை- குழந்தைகளுக்கு நல்ல பெயரிடத் தடை- பால்மாடு வளர்க்கத் தடை- விறுமர், அண்ணமார், காளி, பெரிய தம்பிரான், வீரபத்திரர், வைரவர், நாச்சிமார், காத்தவராயர் ஆகிய தெய்வங்களின் பெயர்களைவிட ஏனைய பெயர்களில் கோவில்கள் அமைக்கத் தடை- குடை பிடிக்கவும், வெள்ளை வேட்டி அணியவும், செருப்பு அணியவும், பெண்கள் குடுமி போட்டுக்கொள்ளவும் தடை- தாவணி போடத் தடை, தங்கத்தாலி, நகை நட்டுக்கள் அணியத் தடை- இப்படித் தடை வரிசையோ கணக்கற்றவை. இவை யாவும் தேசவழமை என்ற மதிப்பீட்டுக்கு உட்பட்டவையாகவே கணிக்கப் பட்டன.
சர்வசன வாக்குரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் இராமநாதன் துரை அவர்கள் இலண்டன் சென்றிருந்தபோது அவரைத் தலைவராகக் கொண்டிருந்த சைவ சித்தாந்த சபைக்குத் தற்காலிகத் தலைவராக, ஆறுமுகநாவலரின் மருமகனாகிய த.கைலாசபிள்ளை அவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். அப்போது பரமேஸ்வராக் கல்லூரியில் சைவ சித்தாந்த அறக்கல்விப் போதனைக்காக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது திரு.யோவேல் போல் அவர்களால் உந்தப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் சிலர், தாமும் சைவ சித்தாந்த அறக்கல்வியைப் பெறவேண்டும் என்று கோரி, மாநாட்டு மண்டபத்துக்குள் நுழைய முற்பட்டபோது, ”நிரந்தரத் தலைவர் இல்லாதபோது இதை அனுமதிக்க முடியாது” என மாநாட்டுத் தலைவர் கைலாயபிள்ளை மறுக்கவே, அறக்கல்விக்கு அனுமதி கேட்டுப் போயிருந்த ஒடுக்கப் பட்டோர் அவரின் மறுப்பை எழுத்தில் பெற்று, டொனமூர்க் கமிஷனுக்கு தந்திமூலம் இலண்டனுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வேளையும் உயர்சாதியைச் சேர்ந்த நாகநாதி அதிகாரம், இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இலண்டனிலிருந்த தம்பிமுத்து ஆகியோர் இந்த மக்களுக்கு ஆதரவாய் இருந்தனர். நம்மவர் துணிந்து செயற்பட்டமையால்த்தான் இராமநாதன் துரை அவர்களின் இலண்டன் பிரயாணம் தோல்வியில் முடிந்ததெனலாம்.
1930ம் ஆண்டுக்காலப் பகுதியில் கண்டி எச்.பேரின்பநாயகத்தைத் தலைவராகவும், செனட்டர் நாகலிங்கம், ஓறேற்றர் சுப்பிரமணியம், கலைப்புலவர் நவரெத்தினம், ஏ.எஸ்.கனகரெத்தினம் ஆகிய முக்கியஸ்தர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இளைஞர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் தோன்றியது.
இந்த ஸ்தாபனம் பல தேசியப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தபோதும், சாதி ஒழிப்பு விவகாரத்தில் பெருமளவு செயற்பட்டு, ”சம ஆசனம்- சம போசனம்” என்ற கொள்கையை ஏற்று நாடெங்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அப்போது இவர்களுக்குச் சாதிமான்களால் கிடைத்த எதிர்ப்புகள் பெருமளவாகும். இதன் பிரச்சாரத்துக்கென தமிழகத் தமிழறிஞர் திரு வி.க அவர்கள் அழைக்கப்பட்டு, சமபந்தி, சமபோசனப் பிரசாரத்தில் ஈடுபடுத்தப் பட்டதும் அவர் திரும்பிப்போன மறுகணமே அவர் பேசிச் சென்றதும், சம ஆசன நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டதுமான பல பாடசாலைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. வசாவிளான் வடமூலை, ஒட்டகப்புலம், சுழிபுரம், புன்னாலைக்கட்டுவன், காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் சுமார் 14பாடசாலைகள் சாதிவெறியர்கள் வைத்த தீயில் எரிந்து சாம்பராகின.
1931இல் வரவிருந்த ஆட்சிமன்றத் தேர்தலைத் தமிழர்களின் உரிமைக்காகப் பகிஷ்கரிக்கத் திட்டமிட்டுப் பிரசாரம் செய்துவந்த வாலிபர் காங்கிரசினர், அவ்வேளை சாதிவெறியர்களின் கோபாக்கினிக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தக் காலகட்டத்தோடு வீறுகொண்டெழுந்து நின்ற சாதி வெறியர்கள் கிராமப்புறங்கள் எங்கும் தங்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தாக்குதல்களுக்கு முதன்முதலில் பலியிடப்பட்டவன் புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டவன் ஒருவனாகும். பீதிமிகுதியால் பனைமரத்தில் ஏறியிருந்த அந்த அப்பாவிப் பஞ்சமன் மரம் தறித்து வீழ்த்தப்பட்டு- கொல்லப்பட்டு- அந்த மரத்தின் அடியிலேயே கொழுத்திப் பிடிசாம்பராக்கப் பட்டான்! ஏனைய கிராமப் புறங்களில் இல்லாத அளவில் புத்தூர்ப் பிரதேசத்தில் நில ஆதிக்க முறையும், சாதி ஒடுக்குமுறையும் மேலோங்கியிருந்தன என்பதற்கு இன்றும் அழியா அடையாளச்சின்னங்கள் பல உண்டு. பல பாரம்பரிய குடும்பங்களின் பழைய நால்சார் வீடுகளில் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பல்லக்குகளும், வீட்டு முற்றங்களின் நீள்வரிசைகளில் சுற்றுவட்டாரத்தில் உண்டாக்கப்பட்ட பல அளவுகள் கொண்ட பொருக்குப் பட்டையற்ற நேர்மரங்களும் இன்றைய அமைப்புக்குச் சற்று வேறுபட்ட, சற்று உயர்ந்த அமைப்பிலுள்ள ஏர்க் கலப்பைகள் இடம்பெற்றுள்ளதும் இன்றும் நாம் பார்க்கக்கூடிய சின்னங்களாகும். அக்காலத்தில் பல்லக்கு முதலிகுடும்பம் எனப்படுவோர் தங்கள் பிரயாணத்திற்குப் பயன்படுத்திய பல்லக்குகளைச் சுமந்துசெல்லக் கோவியர் சமூகத்தினரை அமர்த்தி வைத்துக் கொண்டிருந்ததையும், ஊரிலுள்ள பஞ்சமர்களிடையே ஏற்பட்ட குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க, அளவான மரத்தைப் பார்த்து அவர்களைக் கைகொடுக்க வைத்துச் சவுக்கடி கொடுத்த தர்பார்த்தன வழக்கத்தையும், மாட்டுக்குப் பதிலாக அடிமை மனிதனை ஏரில் பூட்டி, உழுது பயிரிட்டமையையும் இந்த அடையாளச் சின்னங்கள் இன்றும் நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.
கலியாணப் பெண்களுக்கு சீதனம் கொடுக்கும்போது அந்த சீதன வரிசையில் ஒரு கோவியனும், ஒரு பள்ளியும் நிச்சயமாக இடம் பெற்றே தீர வேண்டும் என்பது இறுக்கமான நடைமுறையாயிருந்தது.
இந்தக் குடும்பங்களின் மரண வீடுகளில் தொண்டு வேலைகள் புரியும் வரிசைகள் சில இன்றுவரை இருந்து வருவதைக் காணலாம்.
இயற்கை மரணத்தை எதிர் நோக்கி நிற்கும், நயினார் அல்லது நயினாத்தி மரணப் படுக்கையிற் கிடக்கும்போது கண், வாய் பொத்த, கோவியன், அல்லது கோவிச்சி காத்திருக்க வேண்டும். மரணம் நிகழ்ந்த பின்பு சகல தொண்டு வேலைகளையும் கோவியக் குடும்பம் செய்து முடிக்க வேண்டும். மரணித்தது ஆணாக இருப்பின் ”பரியாரி” என்று இவர்களால் அழைக்கப்படும் அம்பட்டன் பிணத்தைச் சவரம் செய்வதும், ”கட்டாடி” என்று அழைக்கப்படும் வண்ணான் தனது சேவைகளைச் செய்வதும் முதன்மையான அடிமைத்தனத் தொண்டுகளாகும். இவைகளுக்குப்பின் பிரேத ஊர்வலத்தில் நடைமுறை வரிசை பார்ப்பதற்கே மனங்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
கட்டை குத்தி அடுக்கும் பள்ளர் பச்சையான கட்டை குத்திகளைச் சுமந்துகொண்டு முன்னே செல்ல, அதையடுத்து மாராயச்சாதிப் பெண்கள் குடமூதி நடக்க, அதை அடுத்து ”சாம்பான்” என்ற பறையன் பறை கொட்டிச் செல்ல, அதன் பின்னே வண்ணான் நில பாவாடை விரித்துவர, நான்கு கோவியர்கள் பாடை காவியும், நாலு கோவியர்கள் மேலாப்புப் பிடித்தும்வர, கடைசியில் பரியாரி என்ற அம்பட்டன் பாடைக்குப் பொரி எறிந்து நெருப்புச்சட்டி தூக்கிவரும் காட்சி சாதி முறையின் பூரண வெளிப்பாடானதாகும். சகலவிதமான அடிமை குடிமை முறைகளோடும் நடந்து வந்த வைபவ முறைகளில் பெரிய அளவு மாற்றங்கள் எதுவுமே இல்லாது இன்றுவரை அவை நடைமுறையில் இருப்பதைக் காணலாம்.
ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம் சற்று விரிந்து பரந்ததன் பலாபலனாய் 1940ம் ஆண்டில் ஒடுக்கப்பட்ட சகல மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய ”சிறுபான்மைத் தமிழர் மகாசபை”யாகப் பரிணமித்தது.
அன்று சமூக சிறுசிறு இயக்கங்களோடும், தனித்தனியாகவும் இருந்து செயல்பட்டு வந்த எஸ்.ஆர்.யேக்கப் காந்தி, ஆ.ம.செல்லத்துரை, டீ.யேம்ஸ், வீ.ரீ.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம், எம்.ஏ.சி.பெஞ்சமின், எஸ்.நடேசு, ஜீ.நல்லையா, வி.ரி.அரியகுட்டிப்போதகர், ஜீ.எம்.பொன்னுத்துரை, யோனா, யே.டீ.ஆசீர்வாதம், எம்.வி.முருகேசு, விஷயரட்ணம், பேப்பர் செல்லையா, A.P.இராசேந்திரா ஆகியோர்களையும் உள்ளடக்கிக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த ஸ்தாபனம் உடனடியாகவே பல் சாதிக் கொடூர நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. வில்லூன்றி மயானத்தில் முதலி சின்னத்தம்பி சுட்டுக் கொல்லப் பட்டதும், பூநகரியில் நடந்த சாதி வெறியினால் மூவர் உயிர் இழந்ததும் 26வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தானாகும்.
யாழ்ப்பாணத்து நீதிமன்றத்தில் முதலி சின்னத்தம்பியின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நியாய தரந்தரர்கள் தங்களுக்கள் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு முதலி சின்னத்தம்பிக்கான பக்கத்திற்கு வழக்காட மறுத்தபோது திரு.தர்மகுலசிங்கம் அவர்கள் ஒருவர் மட்டுமே சாதிமான்களின் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு வழக்குரைக்க முன் வந்தார். இதன்மூலம் தனது நல்லெண்ணத்தைத் தெரிவித்துக் கொண்டபோதும், மகாசபைக்கு அது போதுமான ஆதரவாகப் படாமையால் கொழும்பு நீதிமன்றத்திற்கு வழக்கை எடுக்க அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த சிங்கள நியாய துரந்தரர் உதவியோடு முயற்சித்து வெற்றி கண்டதுடன், கொழும்பு விசாரணையில் மூவர் தண்டிக்கப்படவும் வைத்தனர். இதேபோன்றே பூநகரி கொலை, வீடெரிப்பு வழக்குகள் கண்டி நீதிமன்றத்தின் பின்பு கொழும்பு நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கவும்பட்டனர்.
அப்போதைக்கப்போது, அவ்வப்பகுதிகளில் சாதி அடக்குமுறைத் தாக்குதல்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாதென்பதனைச் சிறிய அளவில் இவர்கள் உணர்ந்து கொண்டமைதான் சில அரசியல் இயக்கங்களுக்கான ஆதரவுக் குரலையும் இவர்கள் வைக்க முற்பட்டமைக்கான காரணமாயிற்று. இந்த முயற்சியில் முதலாவது பலனாகச் சங்கானையைச் சேர்ந்த பொன்னர் என்பவர் கிராமச் சங்க உறுப்பினராகவும், பளையைச் சேர்ந்த செல்லையா என்பவர் கிராமச் சங்க உறுப்பினராகவும் வந்தனர்.
கிராமச் சங்க உறுப்பினர் முதன்முதல் கிராமச் சங்கக் கூட்டத்திற்குச் சென்றபோது, கைத்தறி நெசவுக் கிடங்கு போல கிடங்கமைத்து, அதிலே கால் செருகிக்கொண்டு உட்காரும்படியும், செல்லையா சென்றபோது, தென்னைமர அடிக்குத்தி ஆசனமாக வைக்கப் பட்டிருந்தமையும், தமிழர்களின் ஜனநாயக அமைப்பு முறையின் சரித்திரத்தில் குறைந்தபட்சம் பித்தளை எழுத்துக்களாலேனும் பொறித்து வைக்கப்பட வேண்டியவையாகும். அத்தோடு, அந்தக் காலகட்டத்தோடு ஒட்டிய ஐந்தாண்டு இடைவெளியில் எரிக்கப்பட்ட வீடுகள் என்று கணக்கை நிரைப் படுத்தினால் அவை:
பூநகரி- 26
காரைநகர்———————–10
கரவெட்டி————————14
ஊர்காவற்றுறை—————5
பருத்தித்துறை(சல்லி)— 3
கன்பொல்லை, கரவெட்டி மேற்கு, கலட்டி, இளவாலை, நாரந்தனை மேற்கு, பளை, அல்லைப்பிட்டி, புத்தூர், சங்கானை மொத்தமாக 65க்குக் குறையாததுதான் அமையும்.
இந்த இடைக்காலத்தின் சாதிவெறி நடவடிக்கைகளில் பலியான உயிர்கள் என்று குறிப்பிடும் போது:-
பன்றித்தலைச்சி————————- 3
பூநகரி—————————————– 3
சண்டிலிப்பாய்—————————– 1
வில்லூன்றி——————————— 1
ஊரெழு————————————— 1
நயினாதீவு———————————– 1
பருத்தித்துறை-சந்தாதோட்டம்—- 1
காரைநகர்———————————– 1
கெருடாவில்——————————– 1
புத்தூர்—————————————- 1
கோண்டாவில்—————————– 1
புன்னாலை———————————- 1
கம்பர்மலை——————————— 1
இக் கட்டுரைக்குள் அடக்கப்படாத 68க்குப் பின் சம்பவங்களினால் இழக்கப்பட்ட உயிர்கள் பற்றிய தொகுப்பு:
சங்கானை———————————– 3
கன்பொல்லை—————————– 3
கரவெட்டி———————————— 1
அச்சுவேலி———————————- 1
சண்டிலிப்பாய்—————————– 1
கொடிகாமம்——————————– 1
பளை—————————————— 2
மிருசுவில்———————————— 1
என நிரைப்படுத்திக் கொள்ளலாம்.
உயிர்ச் சேதமற்ற துப்பாக்கிச் சூடு, வாள்வெட்டு, கத்திக்குத்து, எலும்பு முறிவு, மானபங்கம் ஆகியவை என்று குறிப்பிடும்போது, யாழ்ப்பாணக் குடா நாட்டில் எத்தனை சிறு கிராமங்கள் உள்ளன என்று கணக்கெடுத்து, சிறுநகர் எத்தனை இருக்கிறது என்று பார்த்து இரண்டையும் சேர்த்துக் கணக்கெடுத்து, சராசரி 75னால் பெருக்கினால் வரும் எண்ணிக்கை எதுவோ, அதுதான் உத்தேச- ஆனால் சரியான கணக்காகும்.
இந்தக் காலத்தில் விஷேசமாக நடைபெற்ற இன்னொன்று குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
சோல்பரிப்பிரபு தலைமையிலான ஒரு கமிஷன் இந்தச் சாதி அடக்குமுறையில் விசாரணைக்காக நியமிக்கப் பட்டது.
இந்தக் கமிஷனுக்கு சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் ஒரு விபர வியாக்கியானக் கொத்துச் சமர்ப்பித்திருந்தனர். இந்த வியாக்கியானக் கொத்துச் சமர்ப்பிக்கப் பட்டதுதான் தாமதம், அப்போது பருத்தித்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் சபையினரைச் சென்.சாள்ஸ் பாடசாலையில் சந்தித்து, அந்த வியாக்கியானக் கொத்தை மீளப் பெறும்படியும், தான் சகல சாதிப் பிரச்சனையையும் தீர்த்து வைக்க ஆவன செய்வதாகவும் கூறினார். இதை மகாசபையினர் நிராகரித்தனர். அதன்பின் மகாசபையினர் சோல்பரியால் அழைக்கப் பட்டனர். பத்துப்பேர் கொண்ட ஒரு குழு கொழும்பு சென்று விபரக் கொத்தின் வியாக்கியானத்தைத் தெளிவு படுத்தியதன்மேல் சோல்பரி இதை ஏற்றுத் தனது யாழ்ப்பாண வருகையின்போது சாதி ஒடுக்குமுறைக்குட்பட்ட ஒரு கிராமத்தைத் தனக்குக் காட்டும் படியும் கேட்டு, இந்தக் காரியத்தைத் தான் வந்து பார்க்கும் வரை இரகசியமாக வைத்திருக்கும்படி கூறினார். குறிப்பிட்டபடி சோல்பரி யாழ்ப்பாணம் வந்தபோது, நெல்லியடிச் சந்தியில் பொன்னம்பலம் அவர்களால் பெரு வரவேற்பொன்று அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு முடிந்தபின், இரகசியத் திட்டத்தின்படி பருத்தித்துறை வாடி வீட்டிலிருந்து சோல்பரிப் பிரபுவை மகாசபையினரைச் சேர்ந்த திருவாளர்கள். எம்.சி.சுப்பிரமணியம், டீ.யேம்ஸ், வீ.ரீ.கணபதிப்பிள்ளை ஆகியோர் அழைத்துச் சென்று கன்பொல்லைக் கிராமத்தைக் காட்டினர். இரண்டொரு நாட்களுக்கு முன் சாதி வெறியர்களால் தீயிடப்பட்டுப் புகைந்து கொண்டிருந்த வீடொன்றையும் சோல்பரி பார்த்துக்கொண்டு திரும்பியபின், குறிப்பிட்ட மூவரும் பஸ் எடுப்பதற்காக நெல்லியடிக்கு வந்தனர். இவைகளை அவதானித்திருந்த சாதி வெறியர்கள் மூவரையும் சிறைப் பிடித்து எம்.சி.சுப்பிரமணியம் அணிந்திருந்த கதர் சால்வையாலேயே சுற்றி மூவரையும் கட்டி நையப்புடைத்துப் பட்டப் பகலில் நெருப்பு வைக்க முற்பட்டனர். அந்தவேளை தற்செயலாக டாக்டர் பஸ்ரியான் என்பவரும், மூன்று பொலிஸாரும் காரில் வந்தபோது, சாதி வெறியரின் தீ வைப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு இம்மூவரும் காப்பாற்றப் பட்டனர். இந்தச் சம்பவம் இன்று பகிரங்கப் படுத்தப் படுவதைச் சாதித் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வந்தவர்கள்கூட விரும்ப மாட்டார்கள்.
1949 செப்டம்பர் 14ம் திகதி அப்போதைய உள்நாட்டு மந்திரியும், கிராம அபிவிருத்தி மந்திரியுமாயிருந்த ஒலிவர் குணத்திலகா அவர்கள் இந்துக் கோயில்களில் பலியிடுதல், நிதி நிர்வாகம் ஆகியன பற்றியும் தனக்குக் கிடைத்த குற்றச் சாட்டுதல்களை யோசிக்க கீழ்சபையிலும், மேல் சபையிலும் அங்கத்தவர்களான தமிழ் உறுப்பினர்களை அழைத்துச் சம்பாஷித்தார். அப்போது திரு. சி.சிற்றம்பலம் இவைகளைவிட ஒரு பகுதியினரைக் கோவிலுக்குள் விடாமல் தடுத்து வைத்தல் பெருங் குற்றம், எனவே அதை முதற் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பிரேரிக்க செனட்டர் பெரியசுந்தரம் அதை ஆதரிக்க இந்த ஆலய வழிபாடு விஷயம் பற்றித் தனியாக விசாரிக்க ஒரு கமிஷன் வைக்கிறேன் எனக் கூறி வாய்மூலம் நேருக்கு நேராகவும், எழுத்து மூலமாகவும் கமிஷனுக்குச் சாட்சியங்கள் அளிக்கப்பட்டன. வடக்கில் சுமார் 60ஸ்தாபனங்களினதும் கோவில் நிர்வாகிகள், குருக்கள் என்ற விதத்தில் 80பேர்களினதும் வசதி படைத்த கொழும்பு வாசிகளின் ஸ்தாபனங்கள் 13இனதும் தனியானவர்கள் 12பேர்களினதும் சாட்சியங்கள் பதிவாகின. ஆலயப் பிரவேசத்தை ஆதரித்த விதத்தில் யாழ்ப்பாணம் காந்தி நிலையம், மனோகரா சேவா சங்கம், சுன்னாகம் தாழ்த்தப்பட்டோர் ஐக்கிய சங்கம், தேவரையாளி சைவ கலைஞான சபை, பருத்தித்துறை திராவிடர் கலைமன்றம் ஆகியவை தர்க்கரீதியான முறையில் வழிபாட்டை வற்புறுத்தி நின்றன. அத்துடன் வட பகுதியிலுள்ள ஸ்தாபனங்களையும், தனி மனிதர்களையும் தவிர்ந்த ஏனைய ஸ்தாபனங்களும் தனி மனிதர்களும் நூற்றுக்கு நூறு இந்தத் தர்க்க நியாயங்களுக்குச் சார்பாகவே சாட்சியமளித்துள்ளனர். இதற்கு மாறாகச் சாட்சியம் கொடுத்தவர்களுடைய தர்க்க நியாயங்களுள் ”தாழ்த்தப் பட்டவர்கள் மனிதப் பிறவிகள் அல்லர்” என்ற கருத்துக்களே பொதுவில் பரவலாக இடம் பெற்றிருந்தன.
முதன்முதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இந்து சமய வழிமுறைகளில் தமக்கென பாடசாலை ஒன்றை அமைக்கும் முயற்சியில் வதிரியைச் சேர்ந்த கா.சூரன் என்பவர் எடுத்த விடா முயற்சியால் 1914ம் ஆண்டிலேயே வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி அமைக்கப் பட்டதும், அதைத் தொடர்ந்து கல்வி அடிப்படையிலான முயற்சிகள் எடுக்கப் பட்டதும், அப்பகுதி மக்கள் மேலும் முன் செல்ல உதவியது.
1940 – 41 காலப் பகுதியில் டீ.ரீ.சாமுவேலைத் தலைவராகவும், கவிஞர் செல்லையாவைக் காரியதரிசியாகவும், சைவப்புலவர் வல்லிபுரத்தைத் தனாதிகாரியாகவும் கொண்டு தொடக்கப்பட்ட வடமராட்சி சமூக சேவா சங்கம், வடமராட்சிப் பகுதியில் தொடக்கப்பட்டபோது அப்பகுதியைச் சேர்ந்த பல உயர்சாதி இந்துக்களும் அதற்கு ஆதரவளித்து உற்சாகப் படுத்தினர்.
1944 – 46ம் ஆண்டுக் காலத்தில் அச்சங்க மாநாடொன்றில் தலைமை உரையாற்றிய டாக்டர் பசுபதி என்பவர் ”தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காத வரையில் நான் இன்றிலிருந்து கோவிலுக்குள் போக மாட்டேன்” என்று சபதம் எடுத்துக் கொண்டார். இந்தச் சபதத்தை அவர் உயிர் உள்ளவரை – நீண்டகாலம் கடைப்பிடித்தே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல சம்பவங்கள் மறப்பதற்கரியனவே!
1956-ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் மகாசபையின் இணைக் காரியதரிசிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்ட இ.வி.செல்வரட்ணமும், கவிஞர் பசுபதியும் திரு.எம்.சி.சுப்பிரமணியம் தலைமையில் எடுத்துக்கொண்ட நடைமுறை வேலைகளுக்கு நாடெங்குமிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதிகளிலிருந்து ஆதரவு கிடைத்தது. அதன் பெறுபேறுகளாக 14க்கு மேற்பட்ட பாடசாலைகள் அமைய வழி பிறந்தமையாலும், அந்தக்கால வடபகுதி முதலாவது இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினரான பொன்.கந்தையா அவர்களின் துணிவான, நேரடியான ஒத்துழைப்புக் கிடைத்தமையாலும் இந்த இளைய தலைமுறையினர் மேலும் உற்சாகமுடன் செயற்பட்டனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் குரலின்கீழ் பல சாதியினரையும், பல மதத்தினரையும் பெருவாரியாகக் கலந்துகொள்ள வைத்த அனுபவத்திலிருந்துதான் ”தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்” பிறப்பிக்கப் பட்டதாகும். பல பிற்போக்காளர்களாலும், தமிழர் அரசியல் இயக்கங்களாலும் ஒருமுகமாக இந்த எழுச்சி எதிர்க்கப்பட்டபோது பெருஞ்சாதித் தமிழர் வழி வந்த திரு.என்.சண்முகதாசன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த எழுச்சியை ஏற்று ஒத்துழைப்புத் தர முன் வந்ததோடல்லாமல் ஆக்கபூர்வமான காரியங்களில் நேரடியான ஒத்துழைப்பையும் நல்கியது. இந்தச் செயற்பாடு அதுவரை திறக்கப்படாது யாழ்நகர் எங்குமிருந்த தேனீர்க் கடைகளையும், யாழ் நகருக்கப்பால் கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களின் தேனீர்க் கடைகளையும் திறப்பதற்கு வாய்ப்பளித்தது. மகாசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களில் இருந்துதான் பொதுவான ஒரு அரசியல் உணர்வையும், சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கையும், ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியெங்கும் பரப்ப முடிந்தது.
ஆரம்ப காலத்தில் செனற் சபையில் ஏ.பி.இராசேந்திரா அவர்களுக்கு நியமனங் கிடைத்த பின்னும் சிறிதளவேனும் நகர்ந்து கொடுக்காத சாதிமுறையில் சற்றுத் தளர்ச்சி ஏற்பட்டது, இந்தத் தலைமையின் நடவடிக்கைகளுக்குப் பின்புதான் என்பதைத் துணிந்து கூறிவிடலாம். இதேபோன்று பிற்காலப் பகுதியில் திரு.ஜீ.நல்லையா அவர்களுக்குச் செனட்டில் இடம் கிடைத்தபோதும், திரு.எம்.சி.சுப்பிரமணியம் அவர்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தபோதும், ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர் பார்க்கப்பட்ட பலாபலன்கள் கிடைத்து விடவில்லை. இதிலிருந்து அரசாங்க மட்ட நியமனங்களைவிட இயக்க ரீதியான காரியங்களும், நடவடிக்கைகளுமே உரிமைகளை வென்றெடுக்கக் கூடியனவென்பது புலனாயிற்று.
திருவாளர்கள் சுப்பிரமணியமும், நல்லையாவும் பதவிகள் பெறாத காலத்தில் மக்கள் பெற்று வந்த பேறுகளை, அவர்கள் பதவி வகித்த காலங்களில் பெற முடியவில்லை. இதை அவர்களே ஒப்புக்கொள்வர்.
56க்கும் 66க்கும் இடையே உள்ள காலப் பகுதியில் சமூக ரீதியில் சலுகைகளைப் பெறும் முயற்சியில் சற்று வெற்றி காண முடிந்ததேயன்றி அந்தச் சலுகைகளால் சமூகக் கொடுமைக்குத் தீர்வு காண முடியவில்லை. இதற்கான காரண காரியங்களைத் தேடிப் பிடிப்பதில் அரசியல் கோட்பாடுகளுக்கூடான முயற்சிகள் நடந்தன. இதன் பிரதிபலிப்பாகவே 57ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் நீக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமாக்கப்பட்டபோது சாதிக் கொடுமைகளிலிருந்து முற்றாக விடுபட இது வழி வகுக்கும் என்று பலரும் நம்பினர். ஆனால் அந்தச் சட்டம் ஒரு பரீட்சார்த்த முன்னறிவித்தல் போலவே நிலப் பிரபுத்துவ கெடுபிடிக்குட்பட்ட அரசு யந்திர சேவையாளர்களின் ஆளுகைக்கு உட்பட்டு தானாக அட்டை போலச் சுருண்டு கொண்டது.
இந்த நிலைமையை நன்கு உணர்ந்துகொண்ட இளம் சந்ததியினர் 1966 அக்டோபர் 21ல் ”சாதி ஒழிப்புச் சட்டத்தை அமுல் நடத்து” என்ற சுலோகத்தைத் தூக்கிப் பிடித்து ஆயிரக் கணக்கிற் திரண்டு சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாண நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் மேல் குண்டாந்தடிப் பிரயோகம் செய்யப் பட்டது. பலர் காயமுற்றனர். சிலர் சிறைப் பிடிக்கப் பட்டனர். ஆயினும் திட்டமிட்டபடி ஊர்வலம் நகர்வரை எழுச்சி பொங்க வந்தே சேர்ந்தது!
இந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் என்றுமில்லாத விதத்தில் வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.




வியாழன், 21 மார்ச், 2019

பாம்புசுத்தி மலை


சில ஆர்வக் கோளாறுகள் விரிவடைந்து பருமனாகும்போது பிடரிக்குள் இரசாயன மாற்றமடைந்து அது ஒருவகை அம்னிசியாவாக (amnesia) மாறி விடுகின்றது.
பசிய இலைகள் பழுத்து கிளைகளை விட்டு விலகி ஒரே தடவையில் முழுவதுமாகக் காற்றில் பறப்பதுபோல பிடரிக்குள் இருக்கும்
எல்லாவற்றையுமே (தனக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே) ஒரே ஒரு சம்பவத்தில் மட்டும் பொருத்தமோ, பொருத்தமில்லையோ கவிழ்த்துக் கொட்டச் செய்து விடும்.
இந்த இரசாயனமாற்ற நோயின் அறிகுறி (symptoms);- வெள்ளலரிப் பூவின் வாசம் உடலம் முழுவதும் மணக்கும். ஆனால் அந்த வாசம் இன்னதுதானென இனம் காண முடியாதபடி பிடரிக்குள் கிர் கிர்கிர்... என்ற கிறிச்சான் இரைச்சல் உள்ளுக்குள்ளேயே கேட்கும். ஆனாலும் அது ஒரு ஆனந்தக் கும்மி என்ற உணர்வையே தந்துகொண்டிருக்கும்.
இது ஒரு நோயென்பதை ஏற்க மனம் ஒப்பாது. இன்னும் கொஞ்ச நாட்களில் கண்களிலிருந்து முழுவதுமாக மறைந்து விடப்போகும் தொலைவில் அதோ போய்க் கொண்டிருக்கும் அந்த காலப்  புட்டுவாணிச்சி அவளை சற்று நிறுத்துங்கள்.
வட திக்கில் கண்ணகியிடமிருந்து நாகராசு பெற்றுச்சென்ற அவளது முற்றத்து வெள்ளலரி அது. சோளகம் கண்ணகி பட்டினத்தாரை சங்காரிக்க வேகரம் கொண்டு வீசியடித்தது. ஆயினும் நாகராசு விட்டபாடில்லை. மனகோலம் வேகரமெழுந்து தகதெய் தத்தித்தோம் என தலை சிலிப்பி ஆடினான்.
அவன் யுத்தம் செய்தபடியே வாளேந்திய கரங்களை ஒவ்வொன்றாய் வெட்டி வீழ்த்திக்கொண்டு முன்னேறினான்.
கண்ணகியின் முற்றத்துப் பூவை வாயில் கவ்வியபடியே கடலலைளைக் கடந்தான்
சீராம்பார் தாண்டி இன்னும் கொஞ்சத் தூரம்தான்...
புலியன் தீவின் தென்திசையில் எப்போதும் இல்லாத புதினமாய் குறுக்கே எப்படி வந்தது இந்த மலை.
தன்னுடலால் மலையை சுற்றிக் கட்டினான் நாகராசு. மலை உடலம் மெலிந்தது
அலைகள் அடங்கின.
நாகராசு தெற்கில் கரையேறியபோது நாகம்மாவும் கவுதமனும் அரசின் வேர்களுக்கு மேல் அமர்ந்திருந்தார்கள் ஒன்றாக.
நாக பட்டினத்தார் தீப்பந்தங்களாய் இருவரையும் சூழ நின்றிருந்தனர். நாகராசு கொண்டுசென்ற கண்ணகியின் வெள்ளலரி மலர்களை ஆளுக்குப் பாதியாகக் கொடுத்தான். தீவுகள் வெள்ளலரி வாசக்கடலில் பச்சைப் பாலாடையாக மிதந்தன.
கண்ணகி அதற்குப்  பிரண்டையாறு எனப் பெயர் சூட்டினாள். பச்சைத் தீவுகள் 
வாசமற்ற தாமரை மலர்களை ஏற்க மறுத்தன. அதை எப்போதும் தனது எல்லைக்குள் அனுமதித்ததுமில்லை.
நற்கனி கொடாத மரங்கள் வெட்டப்பட்டு தீயில் வீசப் பட்டன. தீவுகள் தினவெடுத்தபடி நிமிர்ந்து நின்றன. கெறுவம் கடல் முழுவதும் வெப்பல் பரப்பின.

செவ்வாய், 19 மார்ச், 2019

மல்லாந்து படுத்த வார்த்தைகள்


நாவாந்துறை எழுத்தாளனின் படைப்புக்கு நல்லூரடி இலக்கியக்காறர் அடிக்குறிப்பு எழுதும்படி பணிக்கும் நிலையையிட்டு இன்னமும் நாம் வெட்கப்படாமலும், ஏனென்று கேட்காமலும் இருந்துகொண்டு, யாரோ ஒரு RSS fascist ideology எழுத்தாளனைக் கலைத்துக் கொண்டு திரிகிறோம்.