வியாழன், 20 அக்டோபர், 2022

கடல் அட்டை வளர்ப்பும், யாழ்ப்பாண தீவக கடல்களின் அரசியலும், சூழலியலும்

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்)

Senior lecturer at South Eastern University of Sri Lanka

- என்னுரை - பகுதி 1

இந்த வருடம் அக்கரைப்பற்று புத்தகக் காட்சி – 2022 நிகழ்விற்காக நோர்வே உயிர்மெய் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட ”கடல் அட்டை வளர்ப்பும், யாழ்ப்பாண தீவக கடல்களின் அரசியலும், சூழலியலும்” என்ற நுாலை காலம் சென்ற எனது உம்மாவிற்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றேன்.  

வியாழன், 13 அக்டோபர், 2022

நீலவானம் தொட்டு நீலம் பூத்த கடல்

கூத்துக்கலைச்  செம்மல் அண்ணாவி  

சவிரிமுத்து மிக்கேல்தாஸ் 


உலகை உய்விக்கும் உயிர்நாடி ஐம்பூதங்களாகும். 
நீர், நிலம், காற்று மாசுபடும் போது அவை பொங்கி எழுகின்றன. 
“முந்நீர்” என்பது கடலுக்கான பெயரைக் கொண்டது. 
இதனை புறநானூறு:- 

“முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல 
செம்மீன் இமைக்கும் மாசு விசும்பின் 
உச்சநிலை நின்ற உலவு மதி கண்டு....” 

என விளம்புவது, மீனவர் படகின் விளக்காக வான் நடுவே செவ்வாய் மீன் விளங்குகின்றமையும், உச்சி மீது தோன்றும் முழு நிலவைக் கண்டு மயில்கள் ஆடுவதும், இயற்கையின் வழி நடத்தலைக் குறிப்பதாலாகும். 

முத்து பவளமென பல வளம் கொண்ட கடலன்னையை நோக்கி ஆறுகள் பலவாய் நிலமோடியும், மனித ஊறுகள் பலவாய் கடலில் கலப்பதும், உடல் வாட்டி உழைப்பவர்கள் சிந்திய வியர்வையும் கண்ணீரும் கடல் உப்பானதன் காரணமாக இருக்கலாம். 

தமயந்தி (சைமன் விமலராஜன்) கடல் வாழ்வோடும், கவிதையின் கனல் வீச்சோடும் இரண்டறக் கலந்தவர். 

இவர் 1985ல் சாம்பல் பூத்த மேட்டில் எனும் கவிதைத் தொகுப்பையும், 1986ல் உரத்த இரவுகள் என்னும்  கவிதைத் தொகுப்பையும் 2016ல் ”ஏழு கடல் கன்னிகள்” என்ற ஏழு கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். 

தமிழர்களின் பாரம்பரியமிக்க கலையாகத் திகழும் கூத்துக்கலையை, அதன் அடையாளைத்தை நிலை நிறுத்திக் காட்டிய ஊர்களில் ஒன்றாக  மெலிஞ்சிமுனை திகழ்கின்றது. அதன் முன்னோடிகளில் ஒருவரான இவரின் தந்தையார் கலாபூசணம் சைமன் பத்திநாதன் அவர்களின் பயிற்றுவிப்பால், தமயந்தி அவர்கள் ஏகலைவன் என்னும் கூத்துநூலை வெளியிட்டதுடன் நெறிப்படுத்தி மேடையேற்றி உள்ளார். 

தமயந்தி கடல்நீரில் படகோட்டி, பாய் விரித்து மீன் பிடித்ததோடு மட்டுமல்லாமல், கடல்நீரில் உட்புகுந்து அதன் அடித்தளத்தில் வாழும் கடலட்டை, சிங்கி, சங்கு என்பனவற்றை மூழ்கி முத்தெடுடுத்த அனுபவம் மிக்கவர். வட கிழக்கின் கடல்வள உயிரினங்களையும், கடல்தாவரங்கள் பற்றியும், அங்குள்ள கடல் நிலங்களான கண்டமேடு, களப்பு, சுரி, வாய்க்கால் பற்றியும் கரைநில வளங்களைப் பற்றியும் நீண்ட ஆய்வை மேற்கொண்டு அதற்கு ஏற்படப் போகும் எதிர்கால தீங்குகளை ஆதாரத்துடன் பதிவுகள் செய்து வருகின்றார். 

சூரியனைத் தின்றவர்கள்:  

வானக் கதிரோன் குளிக்கும் வண்ணக்கடல் - நம்மை வந்து வந்து கரை தொட்டுப் பாடுகின்ற கடல் ஏன் இன்று பொருமுகின்றது? 

வயிற்றுக்காய் வலை விரித்து வரவு பார்க்கும் ஏழை மீனவன் வலையறுக்கும் கூட்டத்தால் கடலில் வாழ்ந்த மரங்களும் தோப்புகளும் வேரறுந்து கரையொதுங்கி செத்துக்கிடப்பது ஏன்? 

நிலவுக்கே சென்றாலும் நினைவுகள் பாதாளத்தில் வணிக முதலாளிகளின் அதீத இலாபங்களுக்காய் இழுவைப்படகு கொண்டு கடலின் இருப்பாகக் கருக்கொண்ட பூவுடன் பிஞ்சான குஞ்சுகளை வஞ்சனையாக வழித்தெடுத்து நெஞ்சேற்றி அழிப்பதால், கடல் மருந்தறியாக் காயங்களாய் மடிப்பெட்டி நிறைய மூடி, மறைமுகமாய் வெளிப்படுத்துகின்றது. 

அணைகளின் கட்டுப்பாட்டில் ஆற்றுநீரடங்கும். ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் ஆழ்கடல் அடங்குவதா? பருவகாலத்தில் ஆழ் கடலிலிருந்து குடாக்கடல் நோக்கி வரும் கடல் உயிரிகளின் உற்பத்தி, பெருக்கத்திற்கு ஊறு செய்யும் தடுப்பரணாய் கடலட்டை வளர்ப்புத் திட்டம் தடையாவதையும், கழிவுகளையெல்லாம் கடலின் மீது கொட்டும் கொடுமையையும் அச்சப்படாமற் பேசுகின்றன இந்தக் கவிதைகள். 

தொடர் கவிதைகளாக:- 

இறுதியாகப் பேசவிடுங்கள், முண்டஞ்சுறா, அவ்ரோடித், சமாதிகளைச் சுமப்போர், மவுனத்தோடவள் காத்திருத்தல், அவளும் நானும் ஆனியும் வடகரையும், என 23கவிதைகளும் மூழ்கியெடுத்த முத்துக்களாய், கடலின் கண்ணீரைக் கசிந்து உரைக்கின்றன. 

இவைபற்றித் தனித்தனியே விளக்குவதானால் இந்தக் குறிப்பு நீண்டுவிடும் என்பதால் தவிர்த்து, வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். 

“கடல் பேசுமா? 
பேசும். 
பாடுவாள் கவிர் ஆடுவாள் 
பூங்கறை சிதறச் சிரித்திடுவாள். 
அழுவாள் கரை கடந்து சிறு 
உமிரியும் ஊரியும்கூட வாழவென்று" 
............................ 
மெல்லமெல்லக் கவிராடியபடி  
நுகைப்பு எடுக்கின்றது. 

மாலை மறைந்து இரவு நெருங்குவதைச் செக்கல் என்றும், விடிவெள்ளி தோன்றி காலை மலர்வதை வெள்ளாப்பு என்றும், கரை நீளம் படுத்திருந்த பாறைமீது ஆழிமலர்கள் நிரம்பப்பெற்ற பூங்காவைச் சுற்றி சாட்டாமாறு மரங்கள் மதிலாக நிமிர்ந்து நின்றன என்றும் செறிவு மிக்க, நெய்தல் நிலம், தொழில் சார்ந்த வாழ்வியலின் இயல்புகளையும், நெய்தல் நிலத்துப் பண்பாட்டுச் சொற்களையும் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துள்ளார்.

பேச்சால், எழுத்தால், பாட்டால், கூத்தால் சமூகத்தின் இன்னல்களை வெளிப்படுத்தும் தமயந்தியின் கவிதைகளின் ஒவ்வொரு வரியிலும் உள்ளத்தைத் தொடும் வகையில் உணர்வின் அழுத்தம் புலப்படுகின்றது. 

தமயந்தியின் சமூகப்பணி தொடர வாழ்த்துகிறேன்.  

சவிரிமுத்து மிக்கேல்தாஸ் 

01.10.2022


திங்கள், 10 அக்டோபர், 2022

சூரியனைத் தின்றவர்கள் - கரைமணலில் சில வரிகள்...

 கவிஞர் ஹம்சத்வனி`யின் முன்னுரை 



கூத்து, நாடக, கலைஞனாக, கவிஞனாக, ஒளிப்படக் கலைஞனாக, சிறுகதையாளனாக புலத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அறியப்பட்ட தமயந்தியின் இன்னுமொரு முகம் எனக்கு மிகவும் நெருக்கமானது.

கடல்சார் வாழ்க்கை, கடலின் நலம், கடலின் எதிர்காலம் என்பன பற்றி அவன் கொண்டிருக்கும் மிதமான பற்றும் ஆதங்கமும் ஆழமான அறிவும் நிறைந்த முகமே அதுவாகும். 

கவிதை நாடகம், சிறுகதை என பல நூல்களின் படைப்பாளி என்ற பெருமையும் தமயந்திக்கு உண்டு.

தமயந்தியின் "சூரியனைத் தின்றவர்கள்" என்ற இந்தத் தொகுப்பை படித்து அதன் உள்பொருளை என் முன்னறிவுக்கு எட்டியவரையில் கோடிட்டுக் காட்டவும், கிடைத்த அரிய வாழ்கணங்களுக்கும் தமயந்தியின் அன்புக்கும் பாசத்துக்கும் நான் நன்றியுடையவன்.


சூரியனை தின்றவர்களில் உள்ள பெரும்பான்மையான கவிதைகள் கடலையும் கடல்சார் வாழ்வையும், கடலின் சீரழிவுகளையும், கடல் கொள்ளை போவதையும் உணர்வும் உணர்ச்சியும் பொங்க பேசுகின்றன.

ஒரு கடல்சார் வாழ்வியலின் பின்புலத்தில் ஊறிய ஒரு கடல்மனிதன் தமயந்தியாலேதான் இவ்வாறான கடலின் ஈரமும் இரத்தமும் உப்பும் நிறைந்த கவிதாகடல்மொழியில் எழுதமுடியும்.  ஈழத்து கவிதைகளில் கடல் பற்றியதான கவிதைத்தொகுதி இதுவே முதலும் முக்கியமானதும் எனக் கருதுகிறேன். 


கரைகளில் இருந்து கடலைப் பார்த்த சமூகத்தினரை, கவிஞர்களை கடலில் இருந்து நிலத்தையும் வானையும் இந்த முழு உலகையும் அது எதிர்நோக்கும் பேரவலத்தையும் பேரழகையும் பார்க்க கற்றுக் கொடுப்பதற்கு எமது கைகளைப் பற்றி அழைத்துச் செல்கின்றன சூரியனைத் தின்றவர்கள். 


கவிதைகளைப் படிக்கப் படிக்க தீவகத்தின் பல நிலப்பிரதேசங்களும், கடற்பகுதிகளும் கடல்வாழ் மனிதரின் சொல்லாடல்களும் அவர்கள் சார்ந்த மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை என்பவையும் சமூக அரசியல் பொருளாதார சூனியக்காறர்களும் வெளிச்சம் போட்டு காட்டப்படுவதை உணர்வீர்கள்.


இறுதியாக பேசவிடுங்கள், முண்டஞ்சுறா, அவளும் நானும் என்ற கவிதைகளை மீளமீள வாசிக்கவும் படிக்கவும் என்னை நானே தூண்டிக்கொண்டேன்.

கடல் எதிர்நோக்கும் எண்ணிலடங்கா அவலங்கள் ஒரு உலகப் பேரழிவின் தொடக்கம். 

ஒருபகுதி நிலத்தில் நடக்கும் அவலங்களைப் பேசும் உலகத்தீரே! மூன்று பகுதி கடலின் அவலத்தையும் பேசுங்கள் என தமயந்தியின் கவிதைகள் முகத்தில் அறைந்து உணர்த்துகின்றன. 


தமயந்தியின் கவிதா மொழி புதியதாகிறது.

கடலுக்குள் மருந்தறியாக் காயங்கள், ஆறுகள் பெருக்கெடுத்து நீர்கொள்ளாப் பெருங்கடல், இவை போன்ற சொல்லாடல்கள் என்னையும் என் வாசிப்பையும் பல கணங்களுக்கு கட்டிப்போட்டிருக்கின்றன.


இத்தொகுதி கடல்பற்றிய அக்கறையைத் தூண்டும் என நம்புகின்றேன்.

ஆயிரம் மின்மினிகளை புதைத்தது போல் கவிராடும் கடலாளைப்போல் இக்கவிதைகள் ஒளிரும். 

சூரியனைத் தின்றவர்களை நிதானமாக நிறுத்தி நிறுத்தி வாசியுங்கள் படியுங்கள்.

கடலாள் மேலுள்ள காதல் பெருகட்டும். 

கடல் நலம் பேணுக!

அவள் மிரண்டு சதிராடினால் எதுவுமே தாங்காது.


அன்பு

தமிழ்ச்செல்வன் (ஹம்சத்வனி)

மொன்றியல்  கனடா 26.09.2022