ஞாயிறு, 25 டிசம்பர், 2016

முற்றமில்லாத ஒரு படுக்கையறை



ஒரு படுக்கையறையையும்
ஒரு சிறு அமர்வுகூடத்தையும் கொண்ட
சிறிய கவிதை.
அடுக்களை என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும்
நான்கு சொற்களாலான பத்தியொன்றை இறக்கி
மூன்று சொற்களை குத்தவைத்த அடுப்பும் இருந்தது. 


வியாழன், 15 டிசம்பர், 2016

ஊஞ்சலாடும் கவிதைச் சவங்கள்


வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட
வார்த்தைகளால்
அலங்கரித்த உனது கவிதைகள்
அறையெங்கும்
நறுமணத்தையிறைத்து
கிறங்கடிக்கின்றன

மூச்சுக்காற்றை
தள்ளி விழுத்திவிட்டு
மூக்குவாயில்களூடாக
காதலைத் திணித்துவிட முயற்சி செய்கின்றன அவை

வாசனைத் திரவியங்களாலான காதலை
மறுதலிக்கிறது எனது சிறுபறவை

படபடவென சிறகுகளை அசைக்கும்
பறவை சொல்வதின்னதென்று அறி

"போ அப்பாலே உண்மை செத்த வார்த்தைகளே!"

அது
இன்னொன்றையும் சொல்கிறது.
வெளிச்சத்திலோ இருட்டிலோ
முற்றத்திலோ, கொல்லையிலோ
கயிற்றுக்கொடியிலோ
கட்டப்பட்ட ஊஞ்சலிலோ
தொங்கவிடாதே உனது கவிதைகளை
ஏனெனில்
காற்று நடமாடும் தெருக்கள் அவை.
வாசனைத் திரவியங்களின்
நறுமணத்தை
அது அள்ளிச் சென்றுவிடும்
அதற்கு யாரின் அனுமதியும் அவசியமற்றது.
அப்படியொன்று நேருமானால்
நறுமணம் அகற்றப்பட்ட உனது கவிதைப் பிரேதங்கள்
மணக்கத் தொடங்கிவிடும்.

சனி, 26 நவம்பர், 2016

பொன் தூபம் வெள்ளைப்போளம்



மீட்பர்கள் நிறைந்து வழிந்தொழுகும் நிலம்.
சோளகம் சுமந்துவந்து கொட்டிய உவர்ப்புழுதியால்
முகம் பொரிந்து
உதிர்ந்து கொட்டுண்ட ஈச்சம்பழங்களைப்போல்
அவர்கள் உதிர்ந்துபோனாலும்
விதைகளிலிருந்து மீட்பர்கள்
மீண்டும் மீண்டும்
திரண்டெழும் புனித மண்.

வாருங்கள் அவர்களை ஆராதிப்போம்.

வியாழன், 17 நவம்பர், 2016

சூடு -1988


நெஞ்சைச் சுடுகிறதாம்
கறுப்பு என்றிவர்கள்
நையாண்டி பண்ணும்போது
நெஞ்சைச் சுடுகிறதாம்.

எந்த வட்டாரம்?
எந்தக் கோயில்?
எத்தனையாம் திருவிழா?


செவ்வாய், 27 செப்டம்பர், 2016

வண்ணத்துப்பூச்சிகளை வேட்டையாடுதல் --தமயந்தி-



"ஆறுகள் பெருக்கெடுத்து நீர்கொள்ளாப் பெருங்கடல் கொந்தளித்ததுபோல்
தேவதைகளின் துக்க சமுத்திரம் மட்டில்லாததாய்ப் போயிற்றே...."


துறவிகள்.
இளம், கிழத் துறவிகள்.
அவர்கள் வாழ்ந்தார்கள்.
போருக்கு முன்னும் வாழ்ந்தார்கள்
போருக்கு நடுவிலும் வாழ்ந்தார்கள்
போர் முடிந்தும் வாழ்ந்தார்கள்.
சாயம் கரைந்து வெளிறிப்போன அங்கிகளை
வெள்ளாவிப்பானையில் அவித்து அவித்து
கசங்காமல் நலுங்காமல் அணிந்து திரிந்தார்கள்.

செவ்வாய், 1 மார்ச், 2016

அவளும் நானும், ஆனியும் வடகரையும்

 (2 June 2014)

 புலியன் தீவின் கிழக்காக,
நாகை தீவின் வட கிழக்காக,
ஈச்சாமுனையின் வடக்காக,
நாவட்டக் கல்லின் வடமேற்காக
பவளப் பாறைத் தொடரின்
வடகிழக்காக
அடர்ந்த
சாட்டாமாற்றுச் சோலையின்
பெருமணற் பரப்பில்
யாராலும் அபகரித்துச் செல்ல முடியாத
கரு நீலமும், கரும் பச்சையுமான
தாமரைகளின் மத்தியிலிருந்து
அவள் எழுந்து
அலைகளின் விளிம்பில்
வானத்தை
அண்ணார்ந்து பார்த்தபடி
மல்லாந்து கிடந்தாள்.