சனி, 5 ஜூலை, 2014

28 வருடங்களின் பின்

28 வருடங்களின் பின் கைக்கெட்டிய எனது கவிதைகள்
(இரண்டாவது கவிதைத்தொகுப்பு "உரத்த இரவுகள்" - 1986) 


அன்னையிடமிருந்து...! (1985)


ஊர்க்கோடி
கிழட்டு ஆலமரத்து இலைகளெல்லாம்
பழுத்து விட்டன

 மெல்லிய
காற்று ஒன்றின் தழுவலுக்காக
அவை
இன்னமும் நிலத்தில் விழாமல்
காத்துக் கிடக்கின்றன

மகனே!
போனவாரம் நமது கிராமத்துக்குள்
ஆமியாம்....
சோதனையாம்... என ஓர் வதந்தி

உனது கடதாசிப் பெட்டியை
உரப்பையில் கட்டி
கிணற்றடி முருங்கைக்குக் கீழே
புதைத்து விட்டோம்

உனது காற்சட்டை சேர்ட்டை
தலையணைக்குள் வைத்து
வாயைத் தைத்துவிட்டாள் உன் தங்கை.

மகனே!
நமது கிராமத்து கோயில்மணி
இந்த சில மாதத்திற்குள்
பல தடவை
மங்கல ஒலி எழுப்பியுள்ளது.
நான்
எப்போதும் பிரார்த்திப்பது
உனக்கும் உன் தோழர்களுக்கும் இந்த மணி
அமங்கலமாய் அழக்கூடாது என்றே.

இந்த வாரம்
உனது தோழன் சூரியன்
சிறையிலிருந்து விடுதலையாகி
வீட்டுக்கு வந்திருந்தான்.
நன்றாக மெலிந்து விட்டான்.

தெருப் பிச்சைக்காரரும்
பாம்பாட்டிகளும் உட்பட
பலர் தன்னோடு
வதைகூடத்தில் சிறை வைக்கப் பட்டிருந்தார்களாம்.

சில மாதங்களின் பின்
தன்னோடு சிலரை மட்டும்
விடுதலை செய்தார்களாம்

தெருப் பிச்சைக் காரரும் பாம்பாட்டிகளும்
சிறையில்தானாம்

உன் தோழனின் உடலில்
இன்னமும்
ஆறாத அடிகாயங்கள்.
இப்பொழுது மருந்து செய்துகொண்டிருக்கிறான்.

மகனே!
உனது புகைப்படத்தை
முகாமில் பார்த்தானாம்
உன் தோழன் சூரியன் சொன்னான்.
கறுப்பு அல்பத்தில் பல படங்களுடன்
பத்திரமாக வைத்துள்ளார்களாம்.
---------------------------------------------

உரக்கச் சொல்லோம் 1985)

ஒரு சோக இசை,
சில தெருக்களில்
தூங்கி வழியும் கறுப்புக் கொடிகள்,
சுவரில் பூசிய பசை சரியாகப் பிடிக்க மறுத்ததால்
மூலைகள் கிளம்பிப்பறக்கும் அஞ்சலித் துண்டுகள்

சில வாழை மரங்கள்,
சில மரியாதை வேட்டுக்கள்

நாங்கள் அறிந்துகொண்டோம்
அவன் வீரமரணம் அடைந்துவிட்டான்
கண்ணீர் அஞ்சலியுடன் புதைக்கப் பட்டுவிட்டான்
நாங்கள் அறிந்து கொண்டோம்.

ஆனால்
அஞ்சலிகள் மறுக்கப்பட்ட இந்தப் புதைகுழிகள்
இங்கே அழுது வடிகின்றன

நண்பனே
இது இரகசியம்
இவை திரைக்குப் பின்னால் நிகழ்ந்தவை

உரக்கச் சொல்லாதே
உலகறிந்த உண்மையானாலும்
திரைக்குப் பின்னால் நிகழ்த்தப்பட்டவை

இவற்றைப் பேசும் சுதந்திரம்
மறுக்கப்பட்டுள்ளது
உரக்கச் சொல்லாதே

துரோகி நாமத்துடன்
துப்பாக்கிக் குண்டுகளும் பரிசளிக்கப்படும்.
இவைதான் இப்போ நவீன பரிசுப்பொருட்கள்

இப்போ நடப்பவை எல்லாம்
நமது தலைவிதியை
துப்பாக்கிக் குழல்கள் தீர்மானிப்பதே.
 ------------------------------------------

பிலாத்துக்களே! (1985)

சிலுவைகள் இல்லாமலேயே
மரணித்துப்போன இந்த யேசு நாதர்களுக்கு
தண்டனை விதித்த பிலாத்துக்களே!

நீங்கள்
கழுவிய உங்கள்
கைகளைத் துடைத்த துணிகளை
பத்திரப்படுத்தி வைக்கவேண்டாம்.

புதைகுழிகளில் அமிழ்ந்திப்போன
புதிய யேசு நாதர்களுடன்
அதனையும் புதைத்து விடுங்கள்.

நிச்சயம்
அடுத்த சந்ததியின் மேலும்
இரத்தக் கறைகள் படியவேண்டாம்.

அவர்கள்
உண்மையின் பக்கம் நிற்கட்டும்
உண்மைகளுக்காகப் போராடட்டும்.

அவர்களையும்
பிலாத்துக்களாக்கும் இந்த வஸ்த்திரங்களை
பத்திரப்படுத்தி வைக்காதீர்
அவர்கள் உண்மைக்காகப் போராடட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக